ராஞ்சி,
நாடு முழுதும் 175 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய
நக்சல் தலைவர் மிசிர் பெஸ்ராவை, 65, ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர். இவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு, ரூ.2.2 கோடி சன்மானம் அளிக்கப்படும் என ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் அறிவித்திருந்தன. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் போலீசார் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
'ஆபரேஷன் தவுரா பஹத்' என்ற பெயரில் நடந்த இந்த தேடுதல் வேட்டையில், பர்வட்டா அருகேயுள்ள மனியாத் கிராமத்தில் பதுங்கியிருந்த முக்கிய நக்சல் தலைவர் மிசிர் பெஸ்ரா உட்பட மூவர் சிக்கினர். இவரை கைது செய்ததன் மூலம் ஜார்க்கண்டில் நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜார்க்கண்ட் போலீஸ் டி.ஜி.பி., தடாஷா மிஸ்ரா தெரிவித்தார். பிடிபட்ட மூவர் மீதும் 320 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, இரு மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில போலீஸ் ஐ.ஜி., நரேந்திர சிங் கூறியதாவது:
பீஹாரில் நடந்த ஜெஹானாபாத் சிறை உடைப்பு சம்பவம், பல வங்கி கொள்ளைகள், பாதுகாப்பு படையின் ஆயுதங்களை கொள்ளையடித்தல், குண்டு வெடிப்பு சம்பவங்கள் என, பல்வேறு குற்றச் செயல்களில் மூவரும் ஈடுபட்டுள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1980ல், நக்சல் அமைப்பில் இணைந்த - மிசிர் பெஸ்ரா, ஜார்க்கண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் நக்சல்களை பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.