திருவனந்தபுரம்,
கொச்சி மெட்ரோ ரெயில் லிமிடெட் நிறுவனத்தின் பெயரை 'கேரளம் மெட்ரோ ரெயில் லிமிடெட்' என மாற்றக் கோரி கேரள அரசுக்கு அதன் மேலாண் இயக்குநர் லோநாத் பெஹரா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
கொச்சி மெட்ரோ நிறுவனம் தற்போது கொச்சி நகரைத் தாண்டி திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களிலும் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது. மேலும், கொச்சி வாட்டர் மெட்ரோ மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்து போன்ற திட்டங்களையும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
எனவே, ஒரு குறிப்பிட்ட நகரத்தின் பெயரை மட்டும் கொண்டிருக்காமல், மாநிலம் தழுவிய ஒட்டுமொத்தப் போக்குவரத்துப் பணியைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் அவசியம் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பிற மாநிலங்களில் உள்ள மெட்ரோ நிறுவனங்கள், அந்தந்த மாநிலங்களின் பெயர்களில் மாற்றப்பட்ட முன்மாதிரியைப் பின்பற்றியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர் மாற்றத்தால் நிறுவனத்தின் சொத்துகள், ஒப்பந்தங்கள் அல்லது ஊழியர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதற்கான பிராண்டிங் செலவுகள் அனைத்தையும் நிறுவனமே ஏற்கும். கேரள மாநில அரசு இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள் மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இறுதி அனுமதியுடன் இந்தப் பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.
இதற்கிடையில், இந்த மாற்றத்திற்கு எர்ணாகுளம் எம்பி ஹைபி ஈடன் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொச்சி மெட்ரோவின் தற்போதைய பிராண்ட் அடையாளத்தைப் பாதிக்காமல் பிற நகரங்களில் சேவைகளை விரிவுபடுத்த முடியும் என்பதால், பெயர் மாற்றத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர்கள் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.