தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றம் நோக்கி 20-ந்தேதி(இன்று) பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி காரணமாக அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஐந்து மெட்ரோ நிலையங்களை மூடுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

ஊரடங்கு

புதுடெல்லி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாக போலீசார் அறிவித்தனர். இதன் காரணமாக, முன் அனுமதி பெற்ற ஜந்தர் மந்தரைத் தவிர மற்ற இடங்களில் போராட்டம், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்றப் பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், புதுடெல்லியின் தடை உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

போலீசார் தடியடி

இருப்பினும், அங்கிருந்தவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் எப்படியோ நாடாளுமன்றத்தை நோக்கி கிளம்பிவிட்டனர். அவர்கள் நாடளுமன்ற வளாகத்தில் நுழைய முயன்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது.

வளாகத்தில் நுழைய முயன்றோரை நோக்கி துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்லக்கூடும் என தகவல் வெள்யானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்கள் சிறிது நேரம் மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

அமித்ஷாவுடன் சந்திப்பு

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேரில் சந்தித்து பேசியுள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமித்ஷாவை தர்மேந்திர பிரதான் சந்தித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.