தேசிய செய்திகள்

ஒரே நாளில் 6 பேரை தீர்த்து கட்டிய ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் மண்டலத்தில் உள்ள ஒரு வெஞ்சர் பகுதியில் மர்ம நபரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரை தீர்த்து கட்டிய ‘சைக்கோ’ கொலையாளி இறந்த நிலையில் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபரின் உடல்

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் மண்டலத்தில் உள்ள ஒரு வெஞ்சர் பகுதியில் மர்ம நபரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

கொலை குற்றவாளி

போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்தவர் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜ்குமார் என்பது உறுதியானது. அவரது உடல் அருகே விஷம் அருந்திய பாட்டில் கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போக்சோ வழக்கு

தெலுங்கானா மாநிலம், தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மீது, 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2 பெண்கள் கத்தியால் குத்திக்கொலை

தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த வாரம் அந்த சிறுமியின் தாய் மற்றும் ஒரு மூதாட்டி என 2 பேரை ராஜ்குமார் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை

அதன் பின்னர் அவர், அந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத ஏரி பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

மனைவி, 2 மகன்கள் கொலை

அதைத் தொடர்ந்து தனது வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார், மனைவி சரிதா, தனது 2 மகன்களையும் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.

ஒரே நாளில் 6 பேரை கொன்ற சைக்கோ கொலையாளி

இவ்வாறு ஒரே நாளில் 6 பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் 'சைக்கோ' கொலையாளியான ராஜ்குமாரை தேடி வந்த நிலையில், அவர் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்கொலை

அவரது உடல் அருகே விஷம் அருந்திய பாட்டில் கிடந்ததால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT