மும்பை,
புனே மாவட்டம் மோஷி பகுதியில் உள்ள 3 மாடிக் கட்டிடத்தில், மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கழிவு மறுசுழற்சி நிலையம் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் கடந்த புதன்கிழமை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. புனேவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தின்போது அந்த கட்டிடத்திற்குள் 22 பேர் இருந்தனர். அவர்களில் 5 பேர் உடனடியாக தப்பித்து வெளியேறினர். அதே சமயம், கட்டிடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதையடுத்து தேசிய பேரிட மீட்புப் படையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மொத்தம் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில், முதல் நாளிலேயே 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் உள்ளே இருந்த மற்ற 9 பேரை மீட்பதில் பெரும் சிக்கல் நிலவியது. கட்டிட இடிபாடுகள் மேலும் உடைந்து நொறுங்கிவிடும் அபாயம் இருந்ததால் மிகுந்த கவனத்துடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்றைய தினம் 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 7 பேரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிரித்தது.
இன்னும் ஒருவர் மட்டும் மீட்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்றைய தினம் அந்த நபரும் கட்டிட இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இத்துடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்த நிலையில், அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதால் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன.