புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 10 மாநிலங்களை உறுப்பினர்களில் ஏழு பேரான ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம்ஜித் சாஹ்னி, சுவாதி மாலிவால் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சி தனது கொள்கைகள், மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அறநெறிகளிலிருந்து விலகிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஏழு உறுப்பினர்களில் ஆறு பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தநிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். முர்முவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான்,
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 6 மாநிலங்களை உறுப்பினர்களும் பஞ்சாபில் உள்ள அக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். தேர்வு செய்யப்பட்டவர் என்பதற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சரியான தீர்ப்பை வழங்குவார் என்றார்.
மேலும் பஞ்சாபை சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஆவணங்களையும், அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவிகளை ரத்து செய்யக் கோரி முதல்-மந்திரி பகவந்த் மான் ஜனாதிபதியிடம் வழங்கினார்.