தேசிய செய்திகள்

பெங்களூருவில் 'கியூ.ஆர். கோடு' மூலம் மெட்ரோவில் 2 லட்சம் பேர் பயணம்

பெங்களூருவில் ‘கியூ.ஆர். கோடு’ மூலம் மெட்ரோவில் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் சாலை போக்குவரத்தை குறைக்கவும், குறித்த நேரத்தில் வேண்டிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரெயில்களில் நாளுக்கு நாள் மக்கள் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மெட்ரோ டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அவர்கள் வசதிக்காக 'கியூ.ஆர். கோடு' மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியது. மேலும், 'வாட்ஸ்-அப்' மூலம் எளிதாக டிக்கெட் பெறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 'கியூ.ஆர். கோடு' திட்டம் தொடங்கிய நாள் முதல் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை இருந்த இடத்திலேயே பெற்று கொள்கின்றனர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது டிக்கெட் பெறுவதற்கு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தை பயன்படுத்தி கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 19 ஆயிரம் பேர் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

SCROLL FOR NEXT