பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வினாத்தாள் கசிவு மாபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்ப டுத்தியதன் காரணமாக, தேர்வு முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வந்தது. இதற்கிடையே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் காரணமாக வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக பிரதமர் மோடி, புதிய சட்டம் கொண்டு வரப்படுவது பற்றி அறிவித்தார்.
இந்த நிலையில் அந்த சட்டம் தொடர்பான புதிய மசோதாவுக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா-2024ஐ திருத்தி இந்த மசோதா உருவாக்கப்பட்டு இருந் தது. இது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறியதாவது: "கடந்த பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்தன. இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.
இந்தச் சூழலை மாற்றவே நமது அரசு தேர்வு முறையில் அதிவேக நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் மாநிலங்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வினாத்தாள் கசிவு மாபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டின் கல்வி அமைப்பில் மத்திய மற்றும் மாநில அளவிலான இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை” என்றார்.