தேசிய செய்திகள்

ராகுல் காந்தி வெளிநாட்டு பயணத்தில் இந்தியாவை அவமதிப்பு செய்கிறார்; அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியால் நாட்டின் மதிப்பு உயர்ந்து உள்ளது. இதனை ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் இன்று கூறும்போது, ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணத்தின்போது, எப்போதும் இந்தியாவை அவமதிப்பு செய்கிறார்.

உலகில் உள்ள 24 பிரதமர்கள் மற்றும் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசிவிட்டார். அவரது வெளிநாட்டு பயணத்தின்போது 50-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்று விட்டார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் கூறும்போது, பிரதமர் மோடியே பாஸ் (தலைவர்) என கூறினார். இத்தாலியின் பிரதமர் கூறும்போது, பிரதமர் மோடி உலகில் மிக பிரபலம் வாய்ந்த தலைவராக உள்ளார் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் காலை தொட்டு ஒரு நாட்டின் பிரதமர், அவரை வரவேற்றார். இந்தியாவின் தலைமைத்துவம் மீது உலக நாடுகள் இன்று நம்பிக்கையுடன் பார்க்கின்றன. 75 ஆண்டுகளில் ஒருபோதும் இது நடந்தது இல்லை.

நம்முடைய தலைவரால், 140 கோடி நாட்டு மக்களின் மதிப்பு அதிகரித்து இருக்கிறது என்பதே உண்மை. இதனை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT