புதுடெல்லி,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான நாடாளுமன்றத்தில் வைகோ ('Vaiko in Parliament') என்ற புத்தக வெளியீட்டு விழா புதுடெல்லியில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
புதுடெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தகத்தை முறைப்படி வெளியிட்டார்.
மொத்தம் 4 பெரிய ஆங்கில தொகுதிகளாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலின் முதல் பிரதியை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.
வைகோ விளக்கம்முன்னதாக, இந்த டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் டெல்லிக்கு வந்தால் வரலாறு காணாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என்றும், இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் கடுமையான நிர்வாக சிரமங்கள் முளைக்கும் என்றும் கருதி, "டெல்லிக்கு நீங்கள் வரவேண்டாம்" என முதலமைச்சரிடம் நானே அன்போடு கேட்டுக்கொண்டேன் என்று வைகோ நெகிழ்ச்சியுடன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த டெல்லி விழாவில் கலந்துகொண்டார். இருப்பினும், இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்பான 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூலை, விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கும் தனி விழாவில் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் வைகோ தெரிவித்தார்.