தேசிய செய்திகள்

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்; அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை கொண்டு தாக்க அனுமதி கொடுத்தது யார்? என்று அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி அளித்தாரா என்று விளக்கம் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

யார் பொறுப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; " கடந்த 20-ந் தேதி டெல்லியில் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை தெரிவிக்க வேண்டும். நியாயமான மற்றும் பொறுப்புமிக்க கல்வி அமைப்பு வேண்டும் என்றே மாணவர்கள் போராடினர். ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் . இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பெண் மாணவிகள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் பலர் படுகாயமடைந்ததை காட்டுகின்றன. 19 வயதான மாணவர் சாஹில் லோச்சப்பை நேரில் சந்தித்தேன். அவர் பெல்லட் கன் தாக்குதலால் ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் அபாயத்தில் உள்ளார்

அரசின் கடமை

டெல்லியில் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் இறுதியில் உங்களின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றனர். மாணவர்கள் மீது பெல்லட் கன் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த நீங்கள் அனுமதி அளித்தீர்களா? இல்லையெனில் யார் அனுமதி அளித்தார்? சீருடை அணியாமல் கம்புகளால் மாணவர்களை தாக்கியவர்கள் போலீசாரா அல்லது தன்னார்வலர்களா? அவர்களை பணியில் ஈடுபடுத்தியது யார்? அமைதியான போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது அரசின் கடமை. இத்தகைய வன்முறை ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறியுள்ளது. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் பதிலும் பொறுப்பும் கோருகின்றனர். அவர்களுடைய குரல் நிச்சயம் கேட்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.