புதுடெல்லி,
இ-20 (20 சதவீத எத்தனால் கலந்த) பெட்ரோல் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அது மக்களின் வாகனங்களை சேதப்படுத்துவதோடு, அவர்களிடம் இருந்து நேரடியாக பணத்தை பறிக்கும் செயலாகவும் உள்ளது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.இதுதொடர்பாக சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
இ-20 பெட்ரோல் தொடர்பான விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்சினை. பொதுவாக "பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறது" என்று சொல்வார்கள். ஆனால் இங்கு "பருப்பே கருப்பாக இருக்கிறது" என்ற நிலை உள்ளது.நாட்டில் தற்போது ஊழல் மிக அதிகமாக உள்ளது. எந்த பிரச்சினைக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து போராடுவது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரச்சினையையும் வரிசைப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இ-20 பெட்ரோல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் கையில் எடுத்து போராடும். ஏனெனில், இந்த எரிபொருள் மக்களின் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துகிறது. மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. மேலும், மக்களிடம் இருந்து நேரடியாக பணத்தை பறிக்கும் செயலாக இது உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.