தேசிய செய்திகள்

இந்து மதத்தினரின் நம்பிக்கையை ராகுல் காந்தி கிண்டல் செய்கிறார்; பாஜக

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர் சமீபத்தில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தரவுகள் மற்றும் புத்தாக்கம் குறித்து பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தரவுகள் மற்றும் புத்தாக்கம் குறித்த கேள்விகளைத்தான் இந்திய அரசியல்வாதிகள் கலந்தாலோசிக்க வேண்டும். அதுதான் நமது மிகப்பெரிய வளம்.

அந்த வளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?அதன் தன்மை என்ன? அந்த வளம் யாரிடம் உள்ளது? அந்த வளத்தை பெற எவ்வளவு செலவாகும்? இவ்வாறான கேள்விகளைத்தான் அரசியல்வாதிகள் விவாதிக்க வேண்டும். அதற்கு மாறாக நாம் எதை சாப்பிடவேண்டுமா? இதை குடிக்கவேண்டுமா? பசு மாட்டின் சிறுநீர் உடலுக்கு நல்லதா? என்று விவாதிக்கக்கூடாது’ இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்துக்களை கேலி செய்யவும் அவர்களின் மத நம்பிக்கையை கிண்டல் செய்யவும் மத அடிப்படைவாதிகள் இதே சொற்களை பயன்படுத்துவர். அதே சொற்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. தான் எந்த நிலைப்பாட்டில் உள்ளேன் என்பதை ராகுல்காந்தி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார். இந்து மதத்தினரின் நம்பிக்கையை ராகுல் காந்தி கிண்டல் செய்கிறார்.

இத்தகைய சொற்களை கூறும் ராகுல் காந்தி வெளிப்படையாக பேசுபவர் போலவும் அதைவிட மோசமாக கருத்தியல் ரீதியிலான புத்திசாலிபோலவும் சித்தரிக்கபடுவது மிகவும் துயரமான ஒன்று

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.