பரீதாபாத்
ராஜஸ்தானின் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மோனு (வயது 21). பேட்மிண்டன் வீரரான அவர் பள்ளியில் மாநில அளவில் விளையாடி உள்ளதுடன், மாவட்ட அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், பரீதாபாத் நகரில் திகாவன் பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும் ஆத்திரமடைந்து உள்ளனர். ஒரு கட்டத்தில், சிறுமியை அழைத்து கொண்டு மோனு ஓடி போயுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரலில் சிறுமியின் தந்தை குல்பூஷண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர், சிறுமியை போலீசார் மீட்டனர். ஆனால், மோனு கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மோனுவை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, சிறுமியின் வீட்டின் முன்னால் படுகாயங்களுடன் அவர் கிடந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்து போலீசார் சென்று அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி மோனுவின் குடும்பத்தினர் கூறும்போது, மோனுவை சிறுமியின் குடும்பத்தினர் கடத்தி சென்று, 3 நாட்களாக அடைத்து வைத்து, அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் கடுமையாக தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர் என குற்றச்சாட்டாக கூறினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.