தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு மட்டும் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்

இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கைலாஷ்சந்த் வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தின் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(14-ந்தேதி) நடைபெற்றது.

மாநிலத்தில் முதன்முறையாக, அனைத்து 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முடிவுகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க. 4,171 வார்டுகளில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3,597 வார்டுகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் கைலாஷ்சந்த், டித்வானா-குச்சமன் மாவட்டத்தில் உள்ள பர்பத்சார் நகராட்சியின் 13-வது வார்டில் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கைலாஷ்சந்த் வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார்.

அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹீனா 376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட ரஷித் கான் 195 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது குறித்து பா.ஜ.க. வேட்பாளர் கைலாஷ்சந்த் கூறுகையில், “என்னுடைய வாக்கு 12-வது வார்டில் உள்ளது. ஆனால் கட்சி தலைமை என்னை 13-வது வார்டில் போட்டியிட அறிவுறுத்தியது. அந்த வார்டில் யாரோ ஒருவர் மட்டும் எனக்கு வாக்கு செலுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT