தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: இரவில் இடிந்து விழுந்த கட்டிடம் - மாணவர் பலி, பலர் காயம்

கட்டிட இடிபாடுகளில் இருந்து 10 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோட்டா,

ராஜஸ்தானின் கோட்டா நகரில் கட்டிடம் ஒன்று இரவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் காயம் அடைந்தனர்.

அந்த கட்டிடத்திற்கு அருகே, காபி விற்பனை செய்ய கூடிய கடை ஒன்றும் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடம் இடிந்து காபி கடை அமைந்த கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது.

இதுபற்றி கோட்டா மாவட்ட கலெக்டர் பியூஷ் சமரியா கூறும்போது, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடித்தளம் சரியாக இல்லை என தெரிகிறது. எனினும், இன்னும் உறுதியான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. முழு முயற்சியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது என கூறினார்.

கட்டிட இடிபாடுகளில் 2 அல்லது 3 பேர் சிக்கியிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் கோட்டா தொகுதிக்கான எம்.பி. மற்றும் மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கான சிறப்பு பணிக்கான அதிகாரி ராஜீவ் தத்தா, அரசு நிர்வாகத்தின் மற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.