தேசிய செய்திகள்

‘ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது’ - மேற்கு வங்காள கவர்னர் சொல்கிறார்

லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்றும், ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்றும் மேற்கு வங்காள கவர்னர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து தினத்தந்தி நிருபர் அவரிடம், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜெகதீப் தன்கார், நடிகர் ரஜினிகாந்தின் லட்சக்கணக்கான தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன். அவரது ஸ்டைல், நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்தை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவரது சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

சமீபத்தில் வெளியான அவரது படங்கள் உள்பட அனைத்து படங்களையும் நான் பார்த்து விட்டேன். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT