தேசிய செய்திகள்

பிரதமரை மட்டுமின்றி இந்தியாவின் சர்வதேச மதிப்பையும் அவமதித்துள்ளார்; ராகுலுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

ராகுல் காந்தியின் கருத்துகள் அற்பமானவை. எதிர்க்கட்சி தலைவரின் இப்படிப்பட்ட நடத்தையை நான் கண்டதில்லை என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வெளியுறவு கொள்கை குறித்த ராகுலின் கருத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை பற்றி பேசியுள்ள கருத்துகள் மிகவும் அற்பமானவை, கண்டிக்கத்தக்கவை. தனிப்பட்ட முறையில் அவரின் பேச்சு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

என்னுடைய நீண்டநாள் அரசியல் வாழ்க்கையில், எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்தும் இப்படிப்பட்ட நாகரிகம் இல்லாத, கற்பனையும் செய்து பார்க்க முடியாத செயலை கண்டது இல்லை. அவரின் செயல், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் அறிகுறி.

பிரதமர் மீது ராகுலுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அதிருப்தி இருக்கலாம். அதற்காக வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வரும் அவரை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

விடுப்பு எடுக்காத பிரதமர்

நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. அவருக்கு எதிராக வைக்கப்படும் கருத்துகள் நாட்டையும், இந்தியர்களையும் வேதனைப்படுத்துகின்றன. சர்வதேச அளவில் நாட்டின் பெருமையையும் அவமதித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியத்தையும் அவர் சிதைத்துவிட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.