தேசிய செய்திகள்

ஜூன் 18-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி.சண்முகம், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின்னர், தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது.

தற்போதைய நிலையில், 17-வது சட்டசபையில் த.வெ.க.வுக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவும், தி.மு.க.வுக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவும், அ.தி.மு.க.வுக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

அந்த வகையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதல் முறையாக த.வெ.க. உறுப்பினர் நுழைவதற்கு வாய்ப்பாக உள்ளது. இருந்தாலும், த.வெ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.