புதுடெல்லி,
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்றும், கடைசி 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் வழக்கில் அவர் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 4-ந் தேதி ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதற்கிடையே, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23-ந் தேதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த தடை நவம்பர் 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை வருகிற டிசம்பர் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பித்த பிறகு மீண்டும் மூல வழக்கை நடத்த ஐகோர்ட்டை அணுகக் கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட்டே விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை முடியும் வரை மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப் படுவதாகவும் தெரிவித்தனர்.