புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை அவை கூடியதும் மக்களவையில் இந்த விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சார் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறுகையில்,
"மாணவர்களின் நலனே எங்களுக்கு முதன்மை. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மக்களவையில் விரிவாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது" என்றார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, இதுகுறித்து பிரதமர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் சார்பில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செவ்வாய்க்கிழமை பிரதமரின் இல்லம் முன்பு நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்தை குறிப்பிட்டு, "பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை என்பதால்தான் அவரது இல்லம் முன்பு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.
மேலும், "இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார். அதே விஷயத்தில் மக்களவையிலேயே ஏன் அறிக்கை அளிக்கக் கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் அமளி நீடித்தது.