தேசிய செய்திகள்

காப்பீட்டு திட்டத்தில் சேர மறுப்பு : ஒடிசா அரசு மீது மோடி சாடல்

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடு முழுவதும் ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை தீட்டி உள்ளது.

ஜார்சுகுடா,

பிரதமர் நரேந்திர மோடி இந்த காப்பீட்டு திட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார். நாட்டில் உள்ள 10 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளவிலான மருத்துவ காப்பீடு வழங்கும் இந்த திட்டத்தில் சேர ஒடிசாவில் உள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள அரசு மறுத்து விட்டது.

இந்த நிலையில் ஒடிசாவில் டால்சர், ஜார்சுகுடா ஆகிய இடங்களில் நேற்று நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நவீன் பட்நாயக் அரசு ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டத்தில் சேர மறுத்ததை சாடினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ஒவ்வொருவரும் இந்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிவார்கள். ஆனால் நவீன் பட்நாயக் அறிய மாட்டார். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஒடிசா அரசு முன் வரவேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, இத்தனை சதவீதம் கமிஷன் என்று கூறி பெறுகிற கலாசாரமும், முடிவு எடுப்பதில் காட்டும் தாமதமும் ஒடிசா அரசின் அடையாளமாக மாறிவிட்டது என சாடினார்.