தேசிய செய்திகள்

மத நடைமுறைகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டவை- சபரிமலை வழக்கில் நீதிபதிகள் கருத்து

மத நம்பிக்கைகளை கோர்ட்டு கேள்வி எழுப்ப முடியாது என்று தேவசம் போர்டு சார்பில் ஏற்கனவே வாதிடப்பட்டு இருந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நுழையலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அரசியலமைப்பு சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது.

அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதர வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

மத நம்பிக்கைகளை கோர்ட்டு கேள்வி எழுப்ப முடியாது என்று தேவசம் போர்டு சார்பில் ஏற்கனவே வாதிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், “மனசாட்சி சுதந்திரம் பரந்து விரிந்தது. ஒரு தனிநபர், மதத்தை கேள்வி கேட்கலாம். ஆனால் அது மரியாதையுடனும், நம்பகமான முறையிலும் இருக்க வேண்டும்.

அப்போது, நீதிபதி பி.வி. நாகரத்னா குறுக்கிட்டு "மனசாட்சி என்பது மதத்தை விட பெரியது என்று சொல்கிறீர்களா? மனசாட்சி, மதச்சாயத்தை பூச வேண்டுமா?” என்று கேட்டார்.
நீதிபதி அமானுல்லாவும் அதே கருத்தை தெரிவித்தார்.
நீதிபதி அரவிந்த் குமார், "மதப்பிரிவு சார்ந்த நடைமுறைகள், நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்” என்று கருத்து தெரிவித்தார்.