புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு புகார்களை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிய வீடியோவை பேஸ்புக் தளத்தில் இருந்து அந்நிறுவனம் நீக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு நீக்கப்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளருக்கு நாடாளுமன்ற குழு எழுதியுள்ள கடிதத்தில், “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிய காணொளி, பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டதை இக்குழு மிகவும் தீவிரமாக கருத்தில் கொள்கிறது. எனவே இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கப்படாவிட்டால், அவருக்கான சட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசடி செயலிகள் மூலம் முதலீட்டாளர்கள் ரூ.48 லட்சத்திற்கும் மேல் இழந்தது தொடர்பாக, கூகுள் இந்தியா தலைவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. மோசடி செயலிகள் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தது தொடர்பான புகாரில், சைபர் கிரைம் குற்றவாளிகளுடன் கூகுள் இந்தியா தலைவரையும் ஒரு இணை-குற்றவாளியாக ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறை சேர்த்தது போல், இந்திய அரசும் கூகுள் இந்தியா மீது இதேபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.