ஷில்லாங்,
பஸ் ஊழியர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.
மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.
முதல்மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.