தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

பதவியேற்பு விழாவில் பாஜகவில் இருந்து எந்த தலைவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா,

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் 22-வது கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு நிதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அம்மாநில கவர்னராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில் தமிழ்நாட்டு கவர்னராக இருந்த ரவி மேற்கு வங்காளத்திற்கு மாற்றப்பட்டார்.

லோக் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான பிர்ஹாத் ஹக்கிம் மற்றும் இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியான பாஜகவில் இருந்து எந்த தலைவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.