சிக்கல்களை தீர்க்க...
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பரமேஸ்வர், கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், "நல்ல சாலைகள் வேண்டுமென்றால் சுங்கவரி செலுத்த வேண்டும். கடன் வாங்கி தரமான சாலைகள் அமைக்கப்படுகின்றன. அந்த கடனை அடைக்க நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிப்பது அவசியமானது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சில பகுதிகளில் பாஸ்ட்டக் இருந்தும் கடந்து செல்ல காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, "தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் குறுகிய தூரத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அரசு ஒரு ஆய்வு நடத்த வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இஷ்டம் போல் சுங்கவரியை வசூலிக்கக்கூடாது" என்றார்.
முன்னதாக பேசிய பரமேஸ்வர், "மக்கள் வாகனங்களை வாங்கும்போது சாலை வரி செலுத்துகிறார்கள். அதன் பிறகு நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து இஷ்டம் போல் வா வசூலிக்கிறார்கள். 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்று விதி கூறுகிறது. ஆனால் எனது தொகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டும்" என்றார்.