தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டரிடம் பணம், செல்போன் கொள்ளை; உ.பி.யில் அவலம்

4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே கூறியுள்ளார்.

லக்னோ

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கத்தி முனையில் டாக்டரிடம் பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் புதாவுன் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ரத்த வங்கியில் இருந்த டாக்டர் விகாஸ் சர்மா என்பவரை 2 பேர் இன்று அணுகியுள்ளனர். அவரிடம் பேசியபடியே திடீரென கத்தியை எடுத்து காட்டி, அவரை மிரட்டி ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் அவருடைய செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

4 தனிப்படைகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் விகாஸ் உடனடியாக அவசர வார்டுக்கு சென்று மருத்துவமனை பணியாளரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு சென்று சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே கூறியுள்ளார்.