தேசிய செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: ப.சிதம்பரம் பதிலளிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், ப.சிதம்பரம் பதிலளிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்பு பைனான்சியல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (என்.எஸ்.இ.எல்.) ரூ.5 ஆயிரத்து 600 கோடி முறைகேடு புகாரில் சிக்கியது.

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த சமயத்தில் இந்த முறைகேடு தொடர்பாக தங்கள் நிறுவனம் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் குற்றம்சாட்டியது. மேலும், ப.சிதம்பரம், அப்போதைய திறன் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் கே.பி.கிருஷ்ணன், அப்போதைய பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.கே.மேனன், ப.சிதம்பரம், கே.பி.கிருஷ்ணன், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT