கொச்சி,
கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் விமான நிலையங்களில் ரூ.11 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொச்சி சுங்கத்துறை ஆணையர் டி.ரிஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில், 6 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மத்திய புலனாய்வு ஏஜென்சியான வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், கேரளம் போலீசாரும் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் வெற்றிகரமாக கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல்காரர்கள் நூதனமான வழிமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றி தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வர முயற்சிக்கின்றனர்.
அதன்படி, அவர்கள் தங்கத்தை பசையாக்கி மறைத்து வைத்து விமானத்தில் கடத்தி வருகிறார்கள். தங்கத்தை உடல் துவாரங்களில் மறைத்து வைத்தும், பசை வடிவமாக மாற்றி அவற்றை சிறப்பு தையல் முறைகளை பயன்படுத்தி உடைகளில் ஒளித்தும் கடத்தி வருகிறார்கள். சர்வதேச கடத்தல் ஆசாமிகள் ஒவ்வொரு முறையும் தங்களது தங்கம் கடத்தும் யுக்தியை மாற்றி செயல்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அதற்கு ஏற்ப சுங்கத்துறை மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து அவர்களது திட்டங்களை முறியடித்து, வெற்றிகரமாக கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. விமான நிலையங்கள் வழியாக கடத்தி வரும் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்வதில், சுங்கத்துறை மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. இந்தியாவின் பொருளாதார சக்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த கடத்தலுக்கு சதி திட்டம் வகுப்பவர்களையும், அதற்கு நிதி உதவி செய்பவர்களையும் கண்டறியும் முயற்சியில் சுங்கத்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.