காந்தி நகர்,
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 5 நாட்டிகல் மையில் தொலைவில் அரபிக்கடலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கடலோர காவல்ப்படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கடலோர காவல்ப்படையினர், குஜராத் போலீசார் இணைந்து அரபிக்கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏறி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சரக்கு கப்பலில் இருந்து 5 மூட்டைகளில் போதைப்பொருளை சிலர் கடலில் வீசியுள்ளனர்.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் சரக்கு கப்பலில் இருந்து வீசப்பட்ட 5 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மூட்டைகளில் 115 கிலோ எடையில் கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலையும் முந்த்ரா துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 115 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.