தேசிய செய்திகள்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாளை ரூ.19 ஆயிரம் கோடி பணபரிமாற்றம்

நாட்டில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நாளை 8வது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி,

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதியானது அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 8வது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நாளைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாளை காலை 11 மணியளவில் காணொலி காட்சி வழியே 8வது தவணை நிதியை விடுவிப்பதற்கான உரிமை எனக்கு கிடைக்கப்பெறும். இந்த நிகழ்ச்சியில், என்னுடைய விவசாய சகோதர, சகோதரிகளை தொடர்பு கொண்டு பேசுவேன் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மந்திரியும் கலந்து கொள்கிறார்.

SCROLL FOR NEXT