தேசிய செய்திகள்

ரூ.2,000 நோட்டு வழக்கு - அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ரூ.2,000 நோட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினிகுமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையும் இல்லை.

மேலும் கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, ரிட் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 29-ந் தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மேலும் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்றுவது தொடர்பான மேல்முறையீடு வழக்கை அவரசமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதால் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்