புதுடெல்லி,
இந்தியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) நாட்டின் எரிசக்திக்கு ஒரு நங்கூரமாக செயல்பட்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகம், பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதனால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக தற்போது உள்ள சிரமமான காலங்களிலும் ஊழியர்கள பணியாற்றி வருகின்றனர். இதுதவிர வீடுகளில் இருந்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் உயரிய பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இதில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒ.என்.ஜி.சி.யின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி, ஊழியர்களின் 2 நாட்கள் சம்பளம் ரூ.16 கோடி என மொத்தம் ரூ.316 கோடி நிதி ஓ.என்.ஜி.சி. சார்பில் பிரதமரிடம் வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவலை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.