தேசிய செய்திகள்

பலாத்கார வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்ச புகார்; முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி மனைவி நோட்டீஸ்

சட்டப்படியான நோட்டீஸ் பெற்ற 24 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும் என ரன்ஜீத் சிங்கிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

பாலியல் பலாத்கார வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்ச புகார் அளித்தது தொடர்பாக முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி மனைவி நோட்டீஸ் அனுப்பினார்.

பஞ்சாப்பில் முதல்-மந்திரியாக ஆட்சி செய்து வரும் பகவந்த் மானின் மனைவி குர்பிரீத் கவுர். பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை மறைக்க கவுர், ரூ.5 கோடி லஞ்சம் கேட்டார் என அதிர்ச்சி தகவல் பரவியது.

பாலியல் பலாத்கார புகார்

இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான பிரியங் கனூங்கோ கூறும்போது, பஞ்சாப்-அரியானா கோர்ட்டின் நீதிபதி ரன்ஜித் சிங் எங்களுக்கு அளித்த புகாரில், பஞ்சாப் முதல்-மந்திரியின் மனைவி கவுர், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை மறைப்பதற்காக, அதற்கு ஈடாக கவுர் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டார் என தெரிவித்து உள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புடன் தொடர்புடைய வழக்கில் இதுபோன்ற உயர் பதவி வகிப்போருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் ஆகும். இதுபற்றி பதிலளிக்கும்படியும், அறிக்கை சமர்பிக்கும்படியும் மாநில தலைமை செயலாளர் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னாள் நீதிபதி

இதுதவிர, மத்திய உள்விவகார அமைச்சகத்தின் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையிலேயே நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறினார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுக்பால் கைராவின் உறவினரான, முன்னாள் பஞ்சாப் நீதிபதி ரன்ஜீத் சிங்கிற்கு, குர்பிரீத் கவுர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ள தகவலில், இந்த விவகாரத்தில், சட்டப்படியான நோட்டீஸ் பெற்ற 24 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும் என ரன்ஜீத் சிங்கிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர் அதனை செய்ய தவறினால், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.