தேசிய செய்திகள்

தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத வங்கி கடன் ரூ.68 ஆயிரத்து 607 கோடி தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்களின் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருப்பதாகவும், முன்பு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பிய போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறி இருந்தார்.

இந்த விஷயத்தில் பாரதீய ஜனதா அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், டுவிட்டர் பதிவுகள் மூலம் இதுகுறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் அதை திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் அந்த பணத்தை வேறு வழிகளில் பயன்படுத்தி சொத்துகளை வாங்கி உள்ளனர். வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் பணத்தை சுருட்டிவிட்டனர்.

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள், வாரா கடன்கள், கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. கடந்த 2009-2010 மற்றும் 2013-2014 ஆண்டுகளில் (காங்கிரஸ் ஆட்சி காலம்) வணிக வங்கிகளின் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 226 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

காங்கிரஸ் முன்பு ஆட்சியில் இருந்த போதும், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் ஊழலை ஒழிக்க எந்த முனைப்பும் காட்டவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் 18-11-2019-ந் தேதியன்று அளிக்கப்பட்ட பதிலில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்ற திருப்பி செலுத்தாத கடன் தொழில்நுட்ப ரீதியாகவும், விவேக நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து இணைப்பு பதிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது நடைமுறைகளின்படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான். அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும். கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த நடைமுறை பற்றி மன்மோகன் சிங்கிடம் ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ.8,040 கோடி சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.1,693 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தப்பி ஓடிய குற்றவாளியான அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மெகுல் சோக்சி வழக்கில் ரூ.1,936 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.597 கோடியே 75 மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆன்டிகுவா நாட்டில் உள்ள அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

நிரவ் மோடி வழக்கை பொறுத்தமட்டில் ரூ.1,898 கோடி சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.489 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர் இங்கிலாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

2006 முதல் 2008-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட ஏராளமான கடன்கள்தான் வாரா கடன்களாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

மத்திய அரசு எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், இது கணக்கியல் ரீதியான நடவடிக்கைதான் என்றும், கடனை வசூலிக்கும் நடவடிக்கையை அரசு நிறுத்தாது என்றும், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

கடன் தள்ளுபடி என்பது கணக்கியல் ரீதியான நடவடிக்கைதான் என்றும், அதற்கும் உண்மையான கடன் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல்காந்தி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு