தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு விவசாய சங்க போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்த விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கமும் ஒன்று.

இந்த சட்டங்களை திரும்ப பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்த இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய வேளாண் சட்டங்களால் எழும் சர்ச்சையைத் தீர்க்க விவசாயிகள் எழுப்பிய கவலைகளை மனதில் வைத்து குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆகஸ்டு 31-ந்தேதி வரை மோடி அரசுக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. ஆனால் அரசிடம் இருந்து நேர்மறையான தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே 8-ந்தேதி நாங்கள் நாடு முழுவதும் அடையாள தர்ணாவில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விவசாயிகளின் துயரங்களை விளக்குவோம் எனக்கூறிய அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 8-ந்தேதிக்குப்பின் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.