சபரிமலை,
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் பந்தள அரச வம்சப் பிரதிநிதிகளின் தரிசனத்துக்குப் பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி கோவில் நடைசாத்தப்பட்டது. இந்நிலையில், கும்ப மாத (மாசி) வழிபாட்டுக்காக கோவில் நடை நாளை (வியாழன்) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி சபரிமலை நடையை திறப்பார்.யோக நித்திரையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி துயிலெழுப்பியதும் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.
நடை திறக்கப்பட்ட அன்று எந்தப் பூஜையும் நடைபெறாது. தவக்கோலத்தில் இருக்கும் அய்யப்பன் மீது பூசப்பட்டுள்ள விபூதி அகற்றப்படும். பின்னர் இது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் வரும் 17-ம் தேதி வரை நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி மாதாந்திர வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார்.
தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மாதாந்திர பூஜை என்பதால் கூட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, “மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் இதுபோன்ற மாதாந்திர வழிபாடு தரிசனங்களைப் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.