புதுடெல்லி,
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, சனாதன ஒழிப்பு தொடர்பாக பேசியிருந்தார். இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவாகின.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட கோரியும் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த மனு நீதிபதி விக்ரம்நாத், என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் மனுதாரர் உதயநிதிக்கு எதிராக போபாலிலும் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல மனுவில் திருத்தம் செய்ய விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை நான்கு வாரங்கள் கழித்து எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.