தேசிய செய்திகள்

ஆன்லைன் வர்த்தக நிறுவன விற்பனைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஆன்லைன் வர்த்தக நிறுவன விற்பனைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது.

எனினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்தது. இதனால் கடந்த 14ந்தேதி முதல் அடுத்த 19 நாட்களுக்கு (மே 3ந்தேதி வரை) ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

வரும் ஏப்ரல் 20ந்தேதி (நாளை) வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்றும் அதன்பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நாளை முதல் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், இதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்க கூடாது.

ஊரடங்கு முடியும்வரை அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்க அனுமதி வழங்கப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT