தேசிய செய்திகள்

பீகாரில் பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து

மின் கசிவு காரணமாக ரெயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாட்னா,

பீகாரில் பயணிகள் ரெயிலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சசாரம் - பாட்னா பயணிகள் ரெயில், பீகாரின் சசாரம் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் சென்றடைந்தது. அப்போது, திடீரென நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரெயில்வெ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT