தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக சவுதி இளவரசர் சல்மான் நாளை இந்தியா வருகை

2 நாள் பயணமாக சவுதி இளவரசர் சல்மான் நாளை இந்தியா வர உள்ளார்.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.