புதுடெல்லி,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது தொடர்பாக, முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரதீக் ரஸ்தோகி உள்ளிட்ட 41 டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவான் ஆஜராகி, கடைசி நேரத்தில் இப்படியான மாற்றங்கள் மேற்கொண்டது பல தரப்பினரையும் பாதிக்கக்கூடியது என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.