தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் டிராக்டர் மீது பள்ளி பஸ் மோதல்: 2 பேர் பலி; பலர் காயம்

பள்ளி பஸ் டிரைவரின் அதிவிரைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியம் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

வாரங்கால்,

தெலுங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் 40 மாணவர்களை ஏற்றியபடி பள்ளி பஸ் ஒன்று சென்றுள்ளது. அப்போது வாகனம் ஒன்றை முந்தி கொண்டு சென்ற பஸ், திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதுபற்றி பர்வதகிரி வட்ட காவல் ஆய்வாளர் ராஜகோபால் கூறும்போது, பள்ளி பஸ் டிரைவரின் அதிவிரைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியம் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

இந்த சம்பவத்தில் டிராக்டரில் இருந்த தாத்தா இஸ்மாயில் (வயது 50), அவருடைய பேரன் ரேஹான் (வயது 2) என 2 பேரும் பலியானார்கள். டிராக்டரில் 15 பேர் இருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பஸ்சில் பயணித்த மாணவர்களில் 2 பேருக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறினார். விபத்து தொடர்பாக தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.