பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கல்வி, சமூக துறையை பாடநூல் குழு தலைவராக இருந்த ரோகித் சக்ரதீர்த்த அசுத்தமாக்கிவிட்டார். இதற்கு காரணம் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ். எனவே அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் ரோகித் சக்ரதீத்தவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் மந்திரி பி.சி.நாகேசை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நியாயப்படுத்துகிறார்.
பாடத்திட்டத்தை மாற்ற வாய்மொழியாக அனுமதி வழங்க இது என்ன 40 சதவீத கமிஷன் பெறும் திட்டமா?. வாய்மொழி அனுமதி வழங்கி அப்பாவி ஒப்பந்ததாரரை பலி வாங்கிய இந்த அரசு, குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்குகிறது. பசவண்ணர், அம்பேத்கர், நாராயணகுரு, கெம்பேகவுடா, குவெம்பு மட்டுமின்றி மகரிஷி வால்மீகியையும் அவமானப்படுத்தியுள்ளனர். அதனால் பழைய பாடத்திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். இதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.