திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், அங்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருவதால், அங்கு மீண்டும் பள்ளிகளை திறக்க கேரள மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி கேரளாவில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்குரிய தொகை வழங்கப்படும் எனவும் கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரே பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நோய் அறிகுறி இருந்தால், பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.