தேசிய செய்திகள்

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள்: வடமாநில வாலிபர் கைது

மறையூர் வந்த கர்நாடக போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் ரகசிய தகவல்கள் அனுப்பியதாக கடந்த மாதம் வடமா நிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநிலம் உடுப்பி உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மறையூர் வந்த கர்நாடக போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்த வடமாநில வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலிப் இஸ்லாம் (வயது 21) என்பதும், அவர் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை பார்த்து வந்ததும், அப் போது அவர் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அனுப்பி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அலிப் இஸ்லாம் கடந்த ஒரு மாதமாக மறையூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4-வது நபர் என்றனர்.