தேசிய செய்திகள்

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே உள்ள பாதுகாப்பு தடுப்புகளை பாகிஸ்தான் அகற்றியிருந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சாணக்யபுரியில் பாகிஸ்தான் தூதரகம் இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரகம் வெளியே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவுக்கு அருகில் வரிசை தடுப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வளாகத்தின் அங்கீகரிக்கப் பட்ட எல்லைக்கு வெளியே ஒரு சந்தில் அமைந்து இருந்தன. நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவைகள் அகற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்புகள் அகற்றம்

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடத்துக்கான கம்பங்களை பாகிஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகற்றியது. இதற்கு பதில் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்புள்ள பாதுகாப்பு - தடுப்புகளை மத்திய அரசு அகற்றியுள்ளது.