தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #StatueVandalism #Securitytightened

டெல்லி,

திரிபுரா மாநிலத்தில் உள்ள மெலோனியா நகரில் 2 நாட்களுக்கு முன்பு, முந்தைய சோவியத் ரஷியாவின் மறைந்த பிரபல தலைவர் விளாடிமீர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. அண்மையில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததால் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பா.ஜனதா தொண்டர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் லெனின் சிலையை அகற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதனால் தலைவர்களின் சிலை உடைப்பு விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை நேற்று எதிரொலித்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி பிரபல தலைவர்களின் சிலை உடைப்புக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். இதையடுத்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதில், சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், சிலை உடைப்பு தொடர்பான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.