ஆக்ரா,
துபாயில் 20 ஓவர் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடினர். இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் வெற்றியை சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக உ.பி. காவல்துறை தனது டுவிட்டரில், அக்டோபர் 24 அன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, சில சமூக விரோதிகள் இந்திய அணிக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டது. தேச விரோத கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சூழலில், இதுவரை சேகரிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, ஆக்ரா, பரேலி, புடான் மற்றும் சீதாபூரில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் ஏழு பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 5 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆதாரங்களின் அடிப்படையில், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை கொண்டாடி, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வெளியிட்டதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளி ஆசிரியை நபீசா அட்டாரி பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.